×

வறண்டு போனது வெங்கச்சேரி தடுப்பணை: விவசாயிகள், மக்கள் வேதனை


காஞ்சிபுரம் : பருவமழையின்போது செய்யாறு ஆற்றில் தண்ணீர் செல்லும் போதெல்லாம் வெங்கச்சேரி தடுப்பணை நிரம்பி கடல்போல் காட்சியளித்தது. தற்போது தண்ணீரின்றி வறண்டு கிடப்பதால் விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் -உத்திரமேரூர் செல்லும் சாலையில் வெங்கச்சேரி-மாகரல் செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு ₹8 கோடி மதிப்பீட்டில் 1.7 மீட்டர் உயரமும், 282 மீட்டர் நீளத்திலும் தடுப்பணை கட்டப்பட்டு கடந்த 2019ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு அனுமந்தண்டலம் செய்யாற்றில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டது.

அதன்பிறகு சுதந்திரம் பெற்ற பின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தரைக்குமேல் கட்டப்படும் முதல் தடுப்பணை வெங்கச்சேரி தடுப்பணையாகும். செய்யாறு ஆற்றில் தண்ணீர் வந்தால் தடுப்பணையில் தண்ணீர் தேக்கிவைக்கப்படும். தண்ணீர் தேங்கிவைப்பதன் மூலம் ஆற்றுப்பாசனம் மட்டுமின்றி கிணற்றிலும் நீர்மட்டம் உயரும். விவசாயத்துக்கும் இந்த நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தடுப்பணையில் தேக்கி வைக்கப்படும் நீரால் ஆற்றங்கரையோர விவசாயிகள் பாசன வசதி பெற்று பயனடைவார்கள். இந்நிலையில், பல மாதங்களுக்கு முன்பு வரை வெங்கச்சேரி தடுப்பணையில் நீர் இருப்பு இருந்த நிலையில் தற்போது கோடை காலத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக தடுப்பணையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

தடுப்பணை முழுவதும் வறண்ட பூமியாக காட்சியளிக்கிறது. இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யாறு, பாலாறும் நீரின்றி வறண்டு கிடக்கிறது. பருவமழையின்போது செய்யாறு ஆற்றில் தண்ணீர் செல்லும் போதெல்லாம் தடுப்பணை நிரம்பி கடல்போல் காட்சியளித்தது. தற்போது வெங்கச்சேரி தடுப்பணை தண்ணீரின்றி வறண்டு காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகளை வேதனை அடைந்துள்ளனர்.

The post வறண்டு போனது வெங்கச்சேரி தடுப்பணை: விவசாயிகள், மக்கள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Venkacherry barrage ,up ,Kanchipuram ,Seyyar river ,Venkacheri barrage ,Venkacherry-Magaral ,Kanchipuram-Uttaramerur ,Dinakaran ,
× RELATED கோடையின் கடும் வெப்பத்தால் நீரின்றி...